Preloader
சாட்சியின் கூடாரம்
4 Sep 2026 : என் பசியும், என் தாகமும் மேலும் வாசிக்க
31 Aug 2026 : அப்பிரயோஜனமான ஊழியன் மேலும் வாசிக்க
26 Aug 2026 : என்னை நடத்தியவர் யார்? நடத்துகிறவர் யார்? மேலும் வாசிக்க

எங்கள் நோக்கமும், நோக்கும்

"நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்." (கொலோசெயர் 3:4)

சாட்சி: நாங்கள் நம் பிதாவாகிய தேவனுடைய நித்தியத் திட்டத்தையும், நோக்கத்தையும்பற்றிய நற்செய்தியை அறிவிக்க வாஞ்சிக்கின்றோம். நம் பிதாவானவர் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இப்பிரபஞ்சத்தில் வெளியரங்கமாக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளார், திட்டமிட்டுள்ளார். இந்த நோக்கத்திற்காகவே, இந்த நோக்கத்தின்படியே, அவருடைய குமாரனுடைய சாயலுக்கு, அதாவது குணத்துக்கு, ஒத்தசாயலாக மாறுவதற்கு அவர் நம்மை அழைத்து, நீதிப்படுத்தியிருக்கிறார்; இப்போது பரிசுத்தமாக்கிகொண்டுமிருக்கிறார். நாம் அவரை அறிய வேண்டும் என்பதற்காகவும், அவருடைய தெய்வீக சுபாவத்தில் பங்குபெற வேண்டும் என்பதற்காகவும் அவர், கிறிஸ்து சிலுவையில் செய்து முடித்த மீட்பின் வேலையின்மூலம், தம் தெய்வீக ஜீவனை நமக்குத் தந்திருக்கிறார். தேவன் இந்தக் கிறிஸ்துவை நம்முடைய எல்லாத் தேவைக்கும் போதுமான, விவரிக்கமுடியாத, அற்புதமான ஈவாக, கொடையாக, நமக்குத் தந்திருக்கிறார்.

இன்று கிறிஸ்துவை அவருடைய மைய இடத்திற்கும், முதன்மையான இடத்திற்கும் கொண்டுவருவதற்காகப் பரிசுத்த ஆவியானவர் தேவ மக்களுடைய வாழ்க்கையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் நாம் அவருடைய உயிர்த்தெழுந்த ஜீவனால் வாழுமாறு, சிலுவையின்வழியாக நம்மை உயிர்தெழுதலுக்குள் கொண்டுவருகிறார். இதுவே இந்த நோக்கத்தை அடைவதற்கான வழியாகும்.

கூடாரம்:

இந்த உலகம் கிறிஸ்துவை அறிய வேண்டும் என்பதற்காகவும், அவர்பால் ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவும், இறுதியில் ஆட்டுக்குட்டியானவர் பட்ட பாடுகளின் பலன் அவருக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இந்த சாட்சியை நிரூபிக்க வேண்டும் என்பது எங்கள் ஆவல்.

ஊழியங்கள்

தேவமக்கள் கிறிஸ்துவுடன் நெருக்கமாக நடப்பதற்குத் தேவையான வளங்கள் இங்கு உள்ளன. ‘சாட்சியின் கூடாரத்தில்,’ தேவமக்களின் விசுவாசத்தை வளமாக்கவும், கிறிஸ்துவை அறிகிற அறிவை ஆழமாக்கவும் தேவையான வளங்களை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். உங்கள் ஆவிக்குரிய பயணத்தை உற்சாகப்படுத்தவும், உறுதிப்படுத்தவும் இங்கு வழங்கப்பட்டுள்ள வளங்களை உன்னிப்பாய் ஆராய்ந்துபாருங்கள்.

வாழ்வை மாற்றவல்ல மென்மையான குரல்

தேவசெய்தி - CLF - மில்டன்

இந்தச் செய்திகள் ஆரவாரமான “பலத்த பெருங்காற்று” அல்லது புரட்டிப்போடும் “நிலநடுக்கம்” அல்லது சுட்டெரிக்கும் “அக்கினி” போன்றவை அல்ல. மாறாக, “அமர்ந்த மெல்லிய சத்தம்” போன்றவை, கோடைகாலத் தென்றல் போன்றவை.

ஆகையால், வாழ்வின் இன்ப துன்பங்களைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, உங்கள் வாழ்க்கையைத் தேவனுக்கேற்றாற்போல் மாற்றவல்ல இந்த மென்மையான குரலைக் கேட்கும்படி உங்களை வேண்டுகிறேன். அவருடைய குரலை இனங்காணும் திறன் உங்களுக்கு இருந்தால், அந்தக் குரலைக் கேட்டு நீங்கள் கீழ்ப்படிந்தால், உங்கள் வாழ்க்கை தேவனைப் புகழ்ந்து பாடும் பாடலாக மாறும்.

கூச்சல் நிறைந்த இந்த உலகத்தில் அவருடைய ஆடுகள் அவருடைய அமர்ந்த, மெல்லிய குரலைக் கேட்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அனைத்தையும் காண்க

சபை வரலாறு

இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கிறிஸ்துவின் சபை நடந்துவந்த பாதையில் நாமும் சிறிது தூரம் நடந்து வருவோம். பரிசுத்தவான்களின் அர்ப்பணிப்பிலும், இரத்தசாட்சிகளின் கண்ணீரிலும், மறுமலர்ச்சியின் அக்கினியிலும், சபையின் வெற்றிகளிலும் தோல்விகளிலும் தேவனுடைய கரம் பதித்த தடங்களைத் தேடுவோம். உலக சபை வரலாற்றின் நீண்ட பாதையோடு, இந்திய மண்ணில் கிறிஸ்தவ விசுவாசம் வேரூன்றி, துளிர்த்து, வளர்ந்த கதையையும் அறிந்துகொள்வோம். கடந்தகாலத்தின் குரல்களுக்குச் சற்றுச் செவிகொடுப்போம்; அவை இன்று நாம் நடக்கவேண்டிய பாதையில் வெளிச்சம் வீசட்டும்.

அனைத்தையும் காண்க

முன்னோடிகள்

கிறிஸ்துவை அறிந்ததால் தங்கள் வாழ்க்கையின் திசையே மாறிப்போன மனிதர்களின் காலடிச் சுவடுகளைப் பின்தொடர்வோம். தங்கள் சுகத்தையும், பாதுகாப்பையும், சில வேளைகளில் தங்கள் உயிரையும்கூடப் பொருட்படுத்தாமல், கிறிஸ்துவை அறிவிக்கவும், அவரைத் தங்கள் வாழ்க்கையால் வெளிப்படுத்தவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்த முன்னோடிகளின் வாழ்க்கையையும் பணிவிடையையும் அறிந்துகொள்வோம். அவர்கள் நடந்த பாதைகள் எப்போதும் மலர்களால் நிறைந்திருக்கவில்லை; ஆனாலும் அவர்கள் விட்டுச்சென்ற காலடிச் சுவடுகள் இன்றும் நம்மோடு பேசுகின்றன. அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையின்மூலம் தேவன் என்ன செய்யக்கூடும் என்பதை அவர்களுடைய வாழ்க்கை நமக்குச் சொல்லட்டும்.

அனைத்தையும் காண்க

வேத ஆய்வு

தேவனுடைய உயிருள்ள வார்த்தையின் ஆழத்திற்குள் நாமும் மெதுவாக இறங்கிச் செல்வோம். அதன் பக்கங்களில் புதைந்திருக்கும் பொக்கிஷங்களைத் தேடுவோம்; நிழல்களுக்குப் பின்னால் நிற்கும் கிறிஸ்துவைக் காண்போம்; வசனங்களினூடே ஒலிக்கும் தேவனுடைய இருதயத்தின் குரலுக்குச் செவிகொடுப்போம்.

எபிரெயர் நிருபத்தின் வழியாக கிறிஸ்துவின் மேன்மையைக் கண்ட நாம், இப்போது லேவியராகமத்தின் பலிகள், ஆசாரியத்துவம், பரிசுத்தம், தேவசந்நிதி ஆகியவைகளினூடாய் அவரை இன்னும் ஆழமாக அறிந்துகொள்ளப் பயணிக்கிறோம். வேதாகமத்தின் வார்த்தைகள் நம் அறிவை மட்டும் நிரப்புவதற்காக அல்ல; அவை நம் கண்களைத் திறந்து, நம் இருதயத்தைத் தொட்டு, நம் வாழ்க்கையை மாற்றட்டும். இந்தப் பயணத்தில் ஒன்றாக நடப்போம்.

அனைத்தையும் காண்க

பாடல்கள்

கிறிஸ்துவை அறிந்த இருதயத்தின் அனுபவங்கள் பாடலாக மலரட்டும்; அவை அவரை உயர்த்தி, அவருடைய மேன்மையைப் பாடி, இருதயங்களை அவர்பால் ஈர்க்கட்டும். எளிய வார்த்தைகளில் ஆழமான சத்தியங்கள் இசைக்கட்டும்; தேவமக்கள் ஒன்றுகூடி எளிதில் பாடக்கூடிய பாடல்களாக அவை இருக்கட்டும். ஒவ்வொரு பாடலின் அடித்தளமும் தேவனுடைய வார்த்தையில் ஆழமாகப் பதிந்திருக்க, அதன்மேல் கவிதையும், இசையும், உருவகமும், உணர்ச்சியும் அழகிய மாடிகளாக எழும்பட்டும். அந்தப் பாடல்களின் அரும்பொருள் கிறிஸ்துவாக இருக்கட்டும்; அவருடைய ஜீவன் தாகமுள்ள ஆத்துமாக்களுக்குள் ஜீவத்தண்ணீராகப் பாயட்டும்.

அனைத்தையும் காண்க

மெர்லின்

ஆண்டவராகிய இயேசுவை விசுவாசிக்கிற, நேசிக்கிற, சேவிக்கிற, ஆசையாய்ப் பின்தொடர்கிற ஒரு சாதாரண சீடனின் பயணத்தில் பிறந்த சில சிந்தனைகள் இவை. ஒருகாலத்தில் தேவனுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருந்த பயணம், இன்று தேவன் தன்னில் செய்ய விரும்பும் வேலைக்கு இடங்கொடுக்கும் பயணமாக மாறியிருக்கிறது. அந்தப் பயணத்தில் கற்றவை, கண்டவை, தடுமாறிக் கற்றுக்கொண்டவை, கிறிஸ்துவைப்பற்றி இன்னும் அறிந்துகொள்ள வாஞ்சிப்பவை — அவைகளில் சிலவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

அனைத்தையும் காண்க

சாட்சியின் கூடாரத்தில்

கிறிஸ்துவை இன்னும் ஆழமாக அறியவும், விசுவாசத்தில் வேரூன்றி வளரவும், அவருடைய சத்தியத்தை வாழ்க்கையால் வெளிப்படுத்தவும் உதவும் வளங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறோம். தேவசெய்திகள், கிறிஸ்தவ வரலாறு, விசுவாசத்தின் முன்னோடிகளுடைய வாழ்க்கை, வேத ஆய்வுகள், பாடல்கள், எழுத்துக்கள் ஆகியவைகளினூடே நம் கண்கள் கிறிஸ்துவின்மேல் நிலைத்திருக்கட்டும்; நம் இருதயம் அவர்பால் இன்னும் அதிகமாக ஈர்க்கப்படட்டும்.

நாம் அறியும் சத்தியம் வெறும் அறிவாக நின்றுவிடாமல், நம்மில் ஜீவனாகி, நம் வாழ்க்கையின்மூலம் கிறிஸ்துவின் சாட்சியாக வெளிப்படட்டும்.